டேங்கர் லாரி கிளீனர் திடீர் சாவு:2 நாட்களாக நடைபெற்ற முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது


டேங்கர் லாரி கிளீனர் திடீர் சாவு:2 நாட்களாக நடைபெற்ற முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது
x
தினத்தந்தி 23 Nov 2021 6:56 PM GMT (Updated: 23 Nov 2021 6:56 PM GMT)

டேங்கர் லாரி கிளீனர் திடீரென மரணம் அடைந்ததால் அதிருப்தி அடைந்த டிரைவர்கள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

நொய்யல், 
டேங்கர் லாரி கிளீனர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் தெருவை சேர்ந்தவர் செல்வமணி (வயது 59). இவர் கரூர் மாவட்டம் ஆத்தூரில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் பெட்ரோல், டீசல் நிரப்பி செல்லும் டேங்கர் லாரி கிளீனராக பணிபுரிந்து வந்தார். 
நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் உள்ள பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு வந்தது. சிறிது நேரத்தில் சரியாகி விட்டது. பின்னர் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம்
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக டிரைவர்கள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்சை கொண்டு வரும்படி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஆனதால் செல்வமணி இறந்துவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் செல்வமணியின் உடலை அங்கேயே வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதி பாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் இரவு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
உடல் ஒப்படைப்பு
இதனைதொடர்ந்து  செல்வமணியின் உடலை அங்கேயே வைத்து விடிய, விடிய போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதால் செல்வமணியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.10 மணியளவில் அவரது மகன் கார்த்திகேயனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். 
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

Next Story