பா.ம.க.-வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பா.ம.க.-வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2021 9:03 PM GMT (Updated: 23 Nov 2021 9:03 PM GMT)

ஜெய்பீம் படக்குழுவினரை கைது செய்யக்கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் செய்த பா.ம.க.-வன்னியர் சங்கத்தை சேர்ந்த 15 பெண்கள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்;
ஜெய்பீம் படக்குழுவினரை கைது செய்யக்கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் செய்த பா.ம.க.-வன்னியர் சங்கத்தை சேர்ந்த 15 பெண்கள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் அரசூர் ஆறுமுகம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வம், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், கட்டுமான தொழிற்சங்க தலைவர் பந்தல் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் ராம்குமார் வரவேற்றார்.
வன்னியர்களின் 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை ரத்து செய்த ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடையாணை பெற்று 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தையும், ஜெ.குருவையும் கேவலப்படுத்தியதாக ஜெய்பீம் திரைப்படக்குழுவினரைக் கைது செய்யக் கோரியும், பா.ம.க. நிறுவனர் குறித்து அவதூறு பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக பசும்பொன் பாண்டியன் மீது போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
300 பேர் கைது
இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர் சரவணன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதி.விமல், மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் தலைமை நிலைய செயலாளர் கோதை.கேசவன், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் முன்னரசு, மகளிர் அணி நிர்வாகிகள் மதுபாலா, ரேணுகாதேவி, ஒன்றிய கவுன்சிலர் மருதையன், ஊராட்சி மன்ற தலைவர் தேவி பாலமுருகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 15 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story