பொதுவினியோக திட்டம் தொடர்பாக நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தல்


பொதுவினியோக திட்டம் தொடர்பாக நுகர்வோருக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 24 Nov 2021 4:49 AM GMT (Updated: 24 Nov 2021 4:49 AM GMT)

பொதுவினியோக திட்டம் தொடர்பாக நுகர்வோருக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.

தர்மபுரி:
 பொதுவினியோக திட்டம் தொடர்பாக நுகர்வோருக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்புக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர்கள் சித்ராவிஜயன், முத்தையன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் பொதுவினியோக திட்டம் தொடர்பாக நுகர்வோருக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நுகர்வோர் அமைப்பில் உள்ள நபர்கள் லாப நோக்கமின்றி பொதுநல நோக்கோடு செயல்பட வேண்டும். பொதுமக்களுக்குசரியான அளவில்  பொருட்கள் வழங்கப்படுகிறதா? பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறதா? என்பதை கண்காணித்து குறைகள் ஏதேனும் இருப்பின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும். நுகர்வோர் அமைப்பை சேர்ந்தவர்கள் சாதி, மத, பாலின பேதமின்றி செயல்பட வேண்டும்.
உரிய தீர்வு
நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான அரசு திட்டங்களின் செயலாக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொது வினியோக திட்டம் தொடர்பாகவும், நுகர்வோர் நலன் பாதுகாப்பு தொடர்பாகவும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ குழு கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மனுக்களில் உள்ள கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கண்ட பின் அந்த நடவடிக்கை குறித்த விவரத்தை 15 நாட்களில் மனுதாரர்களுக்கு அனுப்ப வேண்டும். தீர்வு தொடர்பான உத்தரவு நகலினை துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா, கலால் உதவி ஆணையர் தணிகாசலம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அய்யப்பன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story