தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Nov 2021 3:44 PM GMT (Updated: 24 Nov 2021 3:44 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி;
சாலையில் இருந்த குழி மூடப்பட்டது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அசன்கான். இவர் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் குழி ஏற்பட்டு ேபாக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த குழியை மூடி சாலையை சீரமைத்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

அந்தரத்தில் தொங்கும் மின்விளக்கு 

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கிராமம் ஆண்டோநகர் வடக்கு பகுதியில் உள்ள தெரு மின்விளக்கு கடந்த ஒரு வாரமாக அந்தரத்தில் தொடங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் அச்சப்படுகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
தாசன், தெற்கு கள்ளிகுளம்.

ஆபத்தான மின்கம்பம்

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-17 தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு நிலை 2-ல் உள்ள மின்கம்பம் மோசமாக உள்ளது. எந்த நேரத்தில் முறிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் மின்வாரிய அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருசாமி, வி.எம்.சத்திரம்.

வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா?

ராதாபுரம்-ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில் வட்டவிளை ரோடு இணையும் இடத்தில் வழிகாட்டி பலகை இல்லை. இதனால் அந்த வழியாக புதிதாக வரும் பயணிகள் குறிப்பிட்ட ரோடு எங்கே செல்கிறது என்று தெரியாமல் அவதிப்படுகிறார்கள். ஆகவே, ரோடு இணையும் இடத்தில் வட்டவிளை என்று வழிகாட்டி பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

புகாருக்கு தீர்வு: பஸ் இயக்கப்பட்டது 

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்திற்கு மருங்காலங்குளத்தில் இருந்து சுரண்டைக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கீழக்கலங்கலை சேர்ந்த டெக்கான் என்பவர் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று முதல் மருக்காலங்குளத்தில் இருந்து கீழக்கலங்கள் பெரிய கிராமம் வழியாக சுரண்டைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

பன்றிகள் தொல்லை

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கற்பகவிநாயகர் கோவில் தெரு புதுக்குளம் கடைசி பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதன் அருகில் பிள்ளையார் கோவில், சாய்பாபா கோவில் உள்ளதால் பக்தர்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சுவாமிநாதன், கிருஷ்ணாபுரம்.

சாலையை சீரமைக்க வேண்டும்

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குணராமநல்லூர் பஞ்சாயத்து கடபோகத்தி கிராமத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாைல கடந்த 5 ஆண்டுகளாக சீரமைக்காமல் கிடக்கிறது. எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சதீஷ்குமார், கடபோகத்தி.

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தென்காசிக்கு செல்ல வேண்டுமானால் நெல்லையில் இருந்து வரும் எஸ்.எப்.எஸ். பஸ்களில் பயணம் செய்ய வேண்டும். ஆனால,் காலை 8.15 முதல் 9 மணி வரை 2 பஸ்கள் மட்டுமே நெல்லையில் இருந்து ஆலங்குளத்திற்கு வந்து தென்காசிக்கு புறப்படுகிறது. இந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். ஆகவே, இந்த நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
பாலசுப்பிரமணியன், ஆலங்குளம்.

துணை சுகாதார நிலையம் சீரமைக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட முன்னீர்காலனி தெருவில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தின் கட்டிடங்கள் மிகவும் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரி இந்த துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டுகிறேன். 
ஆனந்த், ஸ்ரீவைகுண்டம்.

தேங்கிய தண்ணீரால் மக்கள் அவதி

ஓட்டப்பிடாரம் வட்டம் எஸ்.கைலாசபுரம் ஊராட்சியில் சாலையில் தற்போது பெய்த மழையால் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் மக்கள் நடமாட முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே, தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மாணிக்கராஜ், எஸ்.கைலாசபுரம்.


Next Story