மளிகைக்கடைக்காரரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை


மளிகைக்கடைக்காரரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 19 Dec 2021 6:30 PM GMT (Updated: 19 Dec 2021 6:30 PM GMT)

அன்னவாசலில் மளிகைக்கடைக்காரரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அன்னவாசல், 
மளிகைக்கடைக்காரர்
அன்னவாசலை சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது 55). இவர் புதுக்கோட்டையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு அன்னவாசலில் உள்ளது. இந்த நிலையில் இவரது மகளுக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த சில நாட்களாக திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவரது மகன் ஹாலித் (17) மட்டும் வீட்டில் இருந்து படித்து வந்தார். இரவில் அவர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விடுவாராம்.
நகை, பணம் கொள்ளை
நேற்று முன்தினம் இரவு ஹாலித் வழக்கம் போல் உறவினர் வீட்டிற்கு படுக்க சென்றுவிட்டு நேற்று காலை தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்தது. 
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த துணிகள் மற்றும் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை, ரூ.7 ஆயிரம் மற்றும் சிறிய அளவிலான வெள்ளிப்பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.
கண்காணிப்பு கேமரா 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் நாகராஜன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் புதுக்கோட்டையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். மோப்பநாய் அழைத்து வரப்பட்டு சோதனை செய்த போது சம்பவ இடத்தில் இருந்து அன்னவாசல் பள்ளிவாசல் பஸ் நிறுத்தம் வரை சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் 2 மர்ம ஆசாமிகள் ஒரு மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். பின்னர்  ஒருவர் அங்கு இறக்கிவிட்டு மற்றொரு மர்ம ஆசாமி அங்கிருந்து சென்றுவிடுகிறார். இறக்கி விடப்பட்ட ஆசாமி அந்த வீட்டின் சுவர் ஏறி உள்ளே இறங்கி செல்கிறார். மீண்டும் 2 மணிநேரம் கழித்து அதே ஆசாமி வந்து இறக்கிவிட்ட நபரை அழைத்து செல்கின்றார். இந்த காட்சிகளை வைத்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story