செங்குன்றத்தில் ரூ.80 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தாய் கைது


செங்குன்றத்தில் ரூ.80 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தாய் கைது
x
தினத்தந்தி 13 Jan 2022 12:11 AM GMT (Updated: 13 Jan 2022 12:11 AM GMT)

செங்குன்றத்தில் ரூ.80 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தாய் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

செங்குன்றம்,

சென்னை வேளச்சேரி கண்ணகி நகரைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 30). இந்த தம்பதிக்கு பிறந்த 10 மாத ஆண் குழந்தையை வறுமையின் காரணமாக ரூ.80 ஆயிரத்துக்கு செங்குன்றத்தை சேர்ந்த தரகர் தங்கம் என்பவருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, குழந்தையை வாங்கிய தங்கம் செங்குன்றத்தை சேர்ந்த நவநீதம் என்பவருக்கு ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த நிலையில், குழந்தையை வாங்கிய நவநீதம் அந்த குழந்தையை ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள உறவினரிடம் கொடுத்து வளர்க்க சொல்லியுள்ளார்.

தாய், தரகர் கைது

இந்த தகவல் அனைத்தும் சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் குழந்தைகள் நல குழுமத்தின் உறுப்பினர் லலிதா என்பவற்கு தெரியவந்தது. இது தொடர்பாக லலிதா செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை மீட்டு சென்னை அண்ணாநகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

குழந்தையை விற்ற தாய் விஜயலட்சுமி, தரகர் தங்கம் குழந்தையை வாங்கிய நவநீதம் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story