ஆம்புலன்சில் நடுக்காட்டில் பெண்ணுக்கு பிரசவம்


ஆம்புலன்சில் நடுக்காட்டில் பெண்ணுக்கு பிரசவம்
x
தினத்தந்தி 18 Jan 2022 8:36 PM GMT (Updated: 18 Jan 2022 8:36 PM GMT)

பேச்சிப்பாறை அருகே இரவு நேரத்தில் நடுக்காட்டில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குலசேகரம்,
பேச்சிப்பாறை அருகே இரவு நேரத்தில் நடுக்காட்டில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவ வலி
பேச்சிப்பாறை அருகே உள்ள விளாமலை ஆதிவாசி காணி குடியிருப்பைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 28). இவருடைய மனைவி ஸ்ரீலேகா (வயது 25). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 3-வதாக ஸ்ரீலேகா கர்ப்பமானார்.
 இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவில் அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பேச்சிப்பாறை ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜன்காணி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். உடனே பேச்சிப்பாறையிலிருந்து விளாமலைக்கு ஆம்புலன்சு விரைந்து சென்றது.
நடுக்காட்டில் பிரசவம்
அதைத்தொடர்ந்து  ஸ்ரீலேகாவை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதி வழியாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.  ஆம்புலன்ஸ் மோதிரமலை பகுதியின் அருகே காட்டுப்பகுதியில் வரும் போது ஸ்ரீலேகாவுக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. 
அதைத்தொடர்ந்து ஆம்புலன்சில் இருந்த செவிலியர் சரஸ்வதி அறிவுரைப் படி டிரைவர் அஜீஸ் ஆம்புலன்சை சாலை ஓரமாக நிறுத்தினார். தொடர்ந்து செவிலியர் சரஸ்வதி பிரசவ வலியால் துடித்த ஸ்ரீலேகாவுக்கு பிரசவம் பார்த்தார். இதில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து ஸ்ரீலேகாவை பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் செவிலியரை அந்த பகுதி மக்கள் பாராட்டினர். தற்போது தாயும்-சேயும் நலமாக உள்ளனர்.

Next Story