மின்கம்பி பொருத்தும் பணிக்கு மூடப்பட்ட ரெயில்வேகேட்
பழனி-பொள்ளாச்சி ரெயில் பாதையில் மின்கம்பி பொருத்தும் பணிக்காக பழனியில் ரெயில்வேகேட் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
பழனி:
தென்னக ரெயில்வே நிர்வாகம் சார்பில் திண்டுக்கல்-பொள்ளாச்சி ரெயில்பாதையை மின்மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக பொள்ளாச்சி-பழனி, பழனி-திண்டுக்கல் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தண்டவாளம் அருகில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது. தற்போது கம்பத்தில் மின்கம்பிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக என்ஜின், ஒரு பெட்டி கொண்ட ரெயில் உதவியுடன் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் பழனி பகுதியில் மின்கம்பிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.
இதற்காக பழனி-புதுதாராபுரம் சாலையில் சத்யாநகர் ரெயில்வே கேட் முன் அறிவிப்பு இல்லாமல் அவ்வப்போது இன்று மூடப்பட்டது. அதில் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் மட்டும் 3 முறை கேட் அடைக்கப்பட்டது. இதனால் பழனியில் இருந்து திருப்பூர், ஈரோடு செல்லும் வாகனங்களும், பழனி நோக்கி வந்த வாகனங்களும் சாலையின் இருபுறமும் அணி வகுத்து நின்றன. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story