சிதம்பரம் பலமுறை எம்.பி-யாக இருந்தும், நிதி அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை - முதல்வர் பழனிசாமி


சிதம்பரம் பலமுறை எம்.பி-யாக இருந்தும், நிதி அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை - முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 3 April 2019 5:55 AM GMT (Updated: 3 April 2019 5:55 AM GMT)

ப.சிதம்பரம் பலமுறை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டும், நிதி அமைச்சராக இருந்தும் தொகுதிக்கும், தமிழகத்திற்கும் ஒன்றுமே செய்யவில்லை என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

சிவகங்கை

சென்னை அருகே 2000 கோடி ரூபாயில் அமையும் பிரமாண்ட உணவுப் பூங்காவால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பலன் அடைவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவுக்கு ஆதரவாக சிவகங்கையில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

சென்னை அருகே 2000 கோடி ரூபாயில் அமையவுள்ள உணவுப் பூங்கா மூலம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் விளைவிக்கும் காய்கள், பழங்கள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்படும்.

விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காவிட்டால் உணவுப் பூங்காவில் அமைக்கப்படவுள்ள இலவச குளிர்பதனக் கிடங்கில் அவர்கள் தங்கள் பொருட்களை பாதுகாக்கலாம்.

தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாலும் சட்டம் ஒழுங்கும், சாலை வசதியும் சிறப்பாக இருப்பதாலும் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் முன் வருகின்றனர். 304 தொழில் திட்டங்களுக்கு ஒப்பந்தமிடப்பட்டுள்ளது இதன் மூலம் ஐந்தரை லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 5 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் .

கள்ளக்குறிச்சியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப்பூங்கா அமைய உள்ளதாகவும், காவிரி – கோதாவரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் வைகை குண்டாறு திட்டமும் இணைக்கப்படும் என்றும் இதன் மூலம் தமிழகத்தின் வறட்சிப் பகுதிகள் அனைத்தும் முழு பலன் அடையும்.

நாடு வளர்ச்சி அடையவும், நாட்டின் பாதுகாப்புக்கும் மோடி தான் பிரதமர் ஆக வேண்டும். பத்து லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

சாலை வசதி சிறப்பாக உள்ளதால், தொழில் துவங்க உகந்த மாநிலமாக, தொழில் முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள்.

ப.சிதம்பரம் பலமுறை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டும், நிதி அமைச்சராக இருந்தும் தொகுதிக்கும், தமிழகத்திற்கும் ஒன்றுமே செய்யவில்லை.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக உள்ளது; தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.

திமுக அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.  ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என கூறினார்.

Next Story