தேர்தலுக்கு பின் பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சு நடத்த தயார்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி


தேர்தலுக்கு பின் பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சு நடத்த தயார்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி
x
தினத்தந்தி 16 May 2019 2:00 AM GMT (Updated: 16 May 2019 2:00 AM GMT)

தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.

ஐதராபாத்,

நாடாளுமன்றத்துக்கு 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 19ந்தேதி நடக்கிறது. 23ந்தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.  இந்த பின்னணியில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்கும் பணியில் சில அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.  இதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடனான சந்திப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கோ, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில் மாநில கட்சிகள்தான் முக்கிய பங்கு வகிக்கும்.

இடதுசாரி கட்சிகள், எந்த விலை கொடுத்தாலும் பா.ஜ.க.வை ஆதரிக்கவும் மாட்டோம், ஆதரவை பெறவும் மாட்டோம். பா.ஜ.க. அல்லாத ஆட்சியையே நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைப்பது தொடர்பாக மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

Next Story