ராஜஸ்தானின் கோடா நகரில் 'நீட்' பயிற்சி பெற்ற 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை


ராஜஸ்தானின் கோடா நகரில் நீட் பயிற்சி பெற்ற 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
x

ராஜஸ்தானின் கோடா நகரில் ‘நீட்’ பயிற்சி பெற்ற 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கோடா,

பயிற்சி மையங்களின் நகரமான ராஜஸ்தானின் கோடாவில், மேலும் ஒரு நீட் பயிற்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த முகமது நசீது (22), நீட் தேர்வு நடந்த மறுநாள் தேர்வை சரியாக எழுதாத விரக்தியில் கோடா நகரின் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து குதித்து உயிரைவிட்டார்.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தினேஷ்குமார் சர்மா என்ற 15 வயது மாணவர், தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். 11-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், அவர் நீட் தேர்வுக்கு தயாராவதற்காக கோடா நகர் பயிற்சி மையத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு சேர்ந்துள்ளார். குர்ஜா நகரில் விடுதியில் தங்கி பயிற்சிக்கு சென்று வந்தார்.

நேற்று முன்தினம் இரவில் உணவு சாப்பிட்டுவிட்டு அறைக்கு ஓய்வெடுக்க சென்றவர், அவரது பெற்றோர் பலமுறை தொடர்பு கொண்டபோதும் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் மற்றொரு பகுதியில் வசித்தவரிடம், மகனை சென்று பார்த்துவரும்படி கூறி உள்ளனர். அவர் விடுதிக்கு வந்து, வார்டனிடம் விவரத்தை கூறிய பின்னர், அறைக்கு சென்று பார்த்தபோது தினேஷ்குமார் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. குடும்பத்தினரை பிரிந்திருந்த துயரம், படிப்பினால் ஏற்பட்ட மனச்சோர்வு போன்ற காரணங்களல் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினேஷ்குமாரை சேர்த்து இந்த ஆண்டில் கோடா நகரில் 7 பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் மொத்தம் 15 மாணவர்கள் தற்கொலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story