பிரதமரின் நல்லாட்சிக்கு கிடைத்த பலனே இந்த வெற்றி: யோகி ஆதியாநாத் கருத்து


பிரதமரின் நல்லாட்சிக்கு கிடைத்த பலனே இந்த வெற்றி: யோகி ஆதியாநாத் கருத்து
x
தினத்தந்தி 11 March 2017 7:25 AM GMT (Updated: 11 March 2017 7:25 AM GMT)

பிரதமரின் நல்லாட்சிக்கு கிடைத்த பலனே உத்தர பிரதேசத்தில் கிடைத்த மாபெரும் வெற்றி என்று யோகி ஆதியாநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் 403 சட்ட மன்ற தொகுதிகளுக்கு  ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி  அங்குள்ள   78 மையங்களில் காலை 8 மணிக்கு துவங்கியது. முதல் சுற்றில் இருந்தே பாரதீய ஜனதா முன்னிலை பெற்றது. தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த பாரதீய ஜனதா கட்சி அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதேபோல், உத்தரகாண்டிலும் 55 தொகுதிகளிலும் பாரதீய ஜனதா முன்னிலை வகிக்கிறது.

நாட்டில் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மிகப்பெரும் வெற்றியை பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரதீய ஜனதா வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பாஜக எம்.பி யோகி ஆதித்யநாத் கூறுகையில், "உத்தர பிரதேசத்தில்  சட்டம் ஒழுங்கு சீர்குலைவு முடிவு பெற்றுள்ளது. பிரதமர் நரேந்தர மோடி இரண்டரை வருடகாலத்தில் மத்தியில் நடத்திய ஆட்சியின் தாக்கமே உத்தர பிரதேசம், உத்தரகாண்டில் வெளிப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் முதல் மந்திரியை பாஜகவின் ஆட்சிமன்றக்குழு கூடி முடிவெடுக்கும். இதன் முடிவை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வோம்”எனத் தெரிவித்தார். கோரக்பூர் மக்களவை தொகுதியின் எம்.பியான  யோகி ஆதியாநாத்தின் பெயரும் உத்தர பிரதேச பாஜக முதல்வர் போட்டியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story