மம்தா பானர்ஜி தலையை வெட்டுபவருக்கு ரூ.11 லட்சம் சன்மானம் வழங்கப்படும்: பாஜக நிர்வாகி பேச்சால் சர்ச்சை


மம்தா பானர்ஜி தலையை வெட்டுபவருக்கு ரூ.11 லட்சம் சன்மானம் வழங்கப்படும்: பாஜக நிர்வாகி  பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 12 April 2017 5:22 AM GMT (Updated: 12 April 2017 5:21 AM GMT)

மம்தா பானர்ஜி தலையை வெட்டுபவருக்கு ரூ.11 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பாஜக நிர்வாகி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலையை வெட்டிக்கொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத்தொகை வழங்குவேன் என்று பாஜக இளைஞரணி நிர்வாகி யோகேஷ் வர்ஷ்னே பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பிர்பம் மாவட்டத்தில் ஹனுமன் ஜெயந்தியை நினைவுகூறும் வகையில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.  இந்த பேரணிக்கு போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பேரணியாக சென்றவர்கள் அந்த வழியாக இருந்த மதராசா சாலைக்குள் செல்ல முற்பட்டதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், கடும் அதிருப்தி அடைந்த பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி அமைப்பான யுவமோர்ச்சாவின் தலைவர் யோகேஷ் வர்ஷ்னே மம்தா பானர்ஜியை அரக்கன் என்று விமர்சித்தார். 

மேலும், இது பற்றி அவர் கூறியதாவது:- நான் அந்த (தடியடி நடத்தியது) வீடியோவை பார்த்த போது எனக்கு ஒரே ஒரு எண்ணம் தான் ஏற்பட்டது. யாராவது மம்தா பானர்ஜி தலையை வெட்டிக்கொண்டு  என்னிடம் வந்திருந்தால் அவர்களுக்கு ரூ. 11 லட்சம் வழங்கியிருப்பேன். மம்தா பானர்ஜி இந்துக்களை குறிவைத்து அவர்களுக்கு எதிராக செயல்படுகிறார்” என்றார். மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் வழங்கப்படும் என்று பாஜக நிர்வாகி ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story