சபரிமலை அய்யப்பன் கோவில் தங்க கொடி மரத்தை சேதப்படுத்திய 5 பேர் கைது


சபரிமலை அய்யப்பன் கோவில் தங்க கொடி மரத்தை சேதப்படுத்திய 5 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jun 2017 1:13 PM GMT (Updated: 26 Jun 2017 1:13 PM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட தங்க கொடி மரம் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக 5 பேர் பிடிபட்டு உள்ளனர்.


திருவனந்தபுரம்,
 
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ரூ.3.20 கோடி செலவில் புதிய கொடிமரம் வடிவமைக்கப்பட்டது. புதிய கொடி மர பிரதிஷ்டை சனிக்கிழமை நடந்தது. இதையொட்டி சன்னிதானத்தில் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அய்யப்பனை வழிபட்டனர்.  தங்க கொடி மரம் பிரதிஷ்டை தொடர்பான நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் பிற்பகல் 2.40 மணி அளவில் கொடி மரத்தின் சதுரவடிவ பீடத்தின் மீது பாதரசம் வீசப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. 

இதைக் கண்ட கோவில் நிர்வாகிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர், தங்க கொடி மரத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கோவிலுக்கு போலீஸ் உயர் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் விரைந்தனர்.

இந்த நிலையில் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது தங்க கொடி மரத்தை 5 பேர் சேதப்படுத்துவது போன்ற காட்சி பதிவாகி இருந்ததை அவர்கள் கண்டனர். இதைத் தொடர்ந்து கொடி மரத்தை சேதப்படுத்தியதாக சந்தேகத்தின்பேரில் ஒரு முதியவர் உள்பட 5 பேரை கோவில் நிர்வாகத்தினர் பிடித்து வைத்துக் கொண்டனர். பின்னர் ஐந்து பேரும் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே தங்ககொடி மரத்தின் மீது பாதரசம் வீசி சேதப்படுத்திய சம்பவம் அய்யப்ப பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஐவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் வழக்கமாக சபரிமலை கோவிலுக்கு செல்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக இவர்களில் ஒருவர் கொடிமரத்தில் ஏறவும் முயற்சி செய்தார் எனவும் கூறப்படுகிறது.


Next Story