டோக்லாமில் இருந்து இந்தியா - சீனா படைகளை வாபஸ் வாங்க சம்மதம்


டோக்லாமில் இருந்து இந்தியா - சீனா படைகளை வாபஸ் வாங்க சம்மதம்
x
தினத்தந்தி 28 Aug 2017 7:46 AM GMT (Updated: 28 Aug 2017 7:45 AM GMT)

டோக்லாமில் இருந்து இந்தியா - சீனா படைகளை வாபஸ் வாங்க ஒப்புதல் தெரிவித்து உள்ளது என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.


புதுடெல்லி,

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து உள்ளன. இந்திய படைகளை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தி வரும் சீனா, அங்கு போர் தொடுக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டியது. இதனால் சிக்கிம் எல்லையில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்தது. 

இருநாடுகளும் படைகளை திரும்ப பெறவேண்டும், பின்னர் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்ற தன்னுடைய நிலைப்பாட்ட இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது. இருப்பினும் இதனை நிராகரித்த சீனா தொடர்ச்சியாக எச்சரிக்கையை விடுத்தது. 

சீனாவின் அடாவடிக்கு இடையே அண்டை நாடுகள் அளிக்கும் எவ்வித சவாலையும் சந்திக்க போதுமான வலிமை இந்திய படைகளுக்கு இருப்பதாக பதில் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் டோக்லாமில் இருந்து இந்தியா - சீனா படைகளை வாபஸ் வாங்க ஒப்புதல் தெரிவித்து உள்ளது என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. “கடந்த சில வாரங்களாக டோக்லாம் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே தூதரகம் ரீதியிலான தொடர்பு தொடர்ந்தது... இந்த பேச்சுவார்த்தையின் போது இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க முடிந்தது, இந்தியாவால் அதனுடைய கவலைகள் மற்றும் விருப்பங்களையும் தெரிவித்தது. அதன் அடிப்படையில் இந்தியா - சீனா படைகளை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ள ஒப்புதல் தெரிவித்து உள்ளது, பணிகள் நடபெறுகிறது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.


Next Story