உ.பி.யில் யோகி ஆதித்யநாத் கோட்டையில் பா.ஜனதாவிற்கு பெரும் பின்னடைவு


உ.பி.யில் யோகி ஆதித்யநாத் கோட்டையில் பா.ஜனதாவிற்கு பெரும் பின்னடைவு
x
தினத்தந்தி 14 March 2018 9:24 AM GMT (Updated: 14 March 2018 9:24 AM GMT)

உத்தரபிரதேச பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது. #Gorakhpur #BJP


லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா 71 தொகுதிகளை கைப்பற்றியது. அதேவேகத்தில் கடந்த அண்டு அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா பெரும் வெற்றியை தனதாக்கியது. அம்மாநில முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். துணை முதல்-மந்திரிகளாக கேஷவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோரும் பதவி ஏற்று கொண்டனர். யோகி ஆதித்யாநாத் மற்றும் கேஷவ் பிரசாத் மவுரியா ஆகியோர் தங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பதவியேற்றனர். 

இதனால் அவர்களுடைய பாராளுமன்ற தொகுதிகளான கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதிகள் காலியானது. இந்த தொகுதிகளுக்கு உறுப்பினர்களை தேர்வுசெய்ய இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதா ஆட்சி செய்யும் உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிவானது முக்கியம் பெற்றது. கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இருதொகுதிகளிலும் பா.ஜனதா, சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப்போட்டி நிலவியது. கோரக்பூர் தொகுதியில்  47.45 சதவித வாக்குகளும், புல்பூர் தொகுதியில் 37.39 சதவித வாக்குகளும் பதிவாகியது. குறைந்த அளவிலே வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

 வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பா.ஜனதாவிற்கு பெரும் பின்னடைவான நிலை தெரிவந்தது. இருதொகுதியிலும் பா.ஜனதா பெரும் வாக்குகள் பின்னடைவை சந்தித்து உள்ளது.

யோகியின் கோட்டை

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் பா.ஜனதா பின்னடைவு என்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்யும் வகையில் உள்ளது. கோரக்பூர் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு 5 முறை தேர்வு செய்யப்பட்டவர் யோகி ஆதித்யநாத். இப்போது அவர் முதல்-மந்திரியாக உள்ள நிலையில் அவருடைய தொகுதியில் பா.ஜனதா பின்னடைவு என்பது அக்கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாகவே உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாகவே கோரக்பூர் தொகுதி பா.ஜனதா வசம் இருந்து வந்தது. இப்போது சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணியாக நின்று அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியும் தனியாக களமிறங்கியது. 

கோரக்பூர் தொகுதியில் 10 வேட்பாளார்கள் களம் இறங்கினாலும் பா.ஜனதாவின் உபேந்திர சுக்லா, காங்கிரஸ் கட்சியின் சுகிதா சட்டர்ஜீ காரீம் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் பிரவீன் நிஷாத் இடையேவே கடுமையான போட்டி நிலவியது.

இன்று நடைபெற்று வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாடி தொடர்ந்து முன்னிலையை பெற்று வருகிறது. கோரக்பூர் தொகுதியில் நடைபெற்ற 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாடி கட்சி 19,201 வாக்குகள் முன்னிலை பெற்றது. 17-வது சுற்றில் 26,960 வாக்குகள் முன்னிலை பெற்று உள்ள சமாஜ்வாடி. பா.ஜனதா வேட்பாளர் உபேந்திர சுக்லா 2,35,836 வாக்குகளுடன் இரண்டாவது இடம்பெற்றார். புல்பூர் தொகுதியிலும் சமாஜ்வாடி கட்சிதான் முன்னிலை பெற்று உள்ளது. யோகி ஆதித்யநாத் கோட்டையான கோரக்பூரில் சமாஜ்வாடி கட்சி வெற்றியை நோக்கி பயணம் செய்கிறது.

சமாஜ்வாடி கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள். 


Next Story