காவிரி விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல்- மத்திய அரசு


காவிரி விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டின்  தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல்- மத்திய அரசு
x
தினத்தந்தி 22 March 2018 7:50 AM GMT (Updated: 22 March 2018 7:50 AM GMT)

காவிரி விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. #CauveryManagementBoard

புதுடெல்லி

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு 6 வார காலம் அவகாசம் அளித்து கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவில் 5 வாரங்கள் முடிந்துவிட்டன. ஆனால், மத்திய அரசு இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் வருகிற 30-ந் தேதிக்குள் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எழுத்துபூர்வமான கருத்துகனை தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று தான் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சரியான தீர்வாக அமையும் திட்டத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என கூறி இருந்தார்.

இன்று பாராளுமன்றத்தில்  அ.தி.மு.க எம்பி வேணுகோபால் கேள்விக்கு பதில் அளித்த  நீர்வளத்துறை அமைச்சகம்

காவிரி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துவது என தமிழகம், கர்நாடக, கேரளா, புதுச்சேரி   ஆகிய மாநிலங்கள் ஒத்துக்கொண்டுள்ளது . 4 மாநிலங்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக நீர்வளத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. 

Next Story