பொதுப்பிரிவினர் “25 வயதுக்கு மேல் நீட் தேர்வு எழுத முடியாது”: சி.பி.எஸ்.இ. அறிவிக்கையை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது
பொதுப்பிரிவினர் 25 வயதுக்கு மேல் நீட் தேர்வு எழுத முடியாது என்ற சி.பி.எஸ்.இ. அறிவிக்கையை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது.
புதுடெல்லி,
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை பொதுப்பிரிவினர் 25 வயது வரையும், இடஒதுக்கீடு பிரிவினர் 30 வயது வரையும் மட்டுமே எழுத முடியும் என்று வயது உச்சவரம்பு நிர்ணயித்து கடந்த ஜனவரி 22-ந் தேதி சி.பி.எஸ்.இ. அறிவிக்கை வெளியிட்டது.
இந்த வயது உச்சவரம்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சந்தர் சேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டன.
விசாரணை முடிவடைந்த நிலையில், இம்மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். வயது உச்சவரம்பு நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை சட்டரீதியாக செல்லும் என்று உத்தரவிட்டனர். எனவே, 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவினரும், 30 வயதுக்கு மேற்பட்ட இடஒதுக்கீடு பிரிவினரும் நீட் தேர்வு எழுத முடியாது.
அதே சமயத்தில், திறந்தவெளி பள்ளிகளிலும், தனியாகவும் படித்தவர்கள் நீட் தேர்வு எழுத தடை விதிக்கும் உட்பிரிவு செல்லாது என்று கூறி, அதை நீதிபதிகள் ரத்து செய்தனர். அம்மாணவர்களின் தேர்வு முடிவுகளை மற்ற மாணவர்களின் தேர்வு முடிவுகளுடன் சேர்த்து வெளியிடலாம் என்றும் கூறினர்.
Related Tags :
Next Story