மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் வன்முறை களமானது, 13 பேர் உயிரிழப்பு; மம்தா மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்


மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் வன்முறை களமானது, 13 பேர் உயிரிழப்பு; மம்தா மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்
x
தினத்தந்தி 14 May 2018 3:05 PM GMT (Updated: 14 May 2018 3:05 PM GMT)

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் வன்முறை களமானதில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். #MamataBanerjee


கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் பல்வேறு இழுபறிகளை தாண்டி இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் இடையே தீவிரமான போக்கு தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே காணப்பட்டது. தேர்தலின் போது வன்முறை வெடிக்கலாம் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது, அதன்படி பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. ஆனால் பலன் கிடையாது. இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்ற போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. 

அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் கொடூரமான காட்சிகளும் நடந்தது. வாக்குப்பதிவு மையங்கள் முற்றுகையிடப்பட்டதும் பார்க்க முடிந்தது. மம்தா பானர்ஜி தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கையை விடுத்தார், பொதுமக்கள் வன்முறைக்கு இடம் கொடுக்க கூடாது என பெங்காலி செய்தி சேனல்கள் வாயிலாக அழைப்பு விடுத்தார். எந்தஒரு கோரிக்கைக்கும் அரசியல் கட்சி தொண்டர்கள் இடம் கொடுக்கவில்லை. தேர்தல் களமே பெரும் போர்களமாக மாறிஉள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே வன்முறையில் ஈடுபட்டார்கள் என எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

2003-ம் ஆண்டு தேர்தலின் போது மேற்கு வங்காளத்தில் வன்முறை வெடித்ததில் 76 பேர் பலியாகினர், 2013-ல் 39 பலியாகினர். 

இந்த ஆண்டு பாதுகாப்பான தேர்தலை உறுதிசெய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும் இன்று அங்கு காணப்பட்ட நிலை போலீசாரால் கட்டுக்குள் கொண்டுவர முடியாததை காட்டுகிறது. வன்முறைகளில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பலர் காயம் அடைந்து உள்ளார்கள், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வாகனங்களுக்கு தீ வைப்பு, சாலையில் சென்றவர்களை தாக்கியது என பல்வேறு வன்முறைகள் வெடித்து உள்ளது. வன்முறை தொடர்பாக மேற்கு வங்காள மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கையை கோரி உள்ளது.

இதற்கிடையே வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என எதிர்க்கட்சிகள் மம்தாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. 2019 தேர்தலில் மூன்றாவது அணி என்பதற்காக தூண்டிவிடப்பட்டது என மம்தாவை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளன. மேற்கு வங்காளத்தில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று, பிரதமர் நாற்காலி கனவு என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது.

Next Story