பத்ரிநாத் கோவிலுக்கு அரிய வகை பசுக்கள் நன்கொடை; முலாயம் சிங்கின் மருமகள் வழங்கினார்
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் இளைய மருமகள் பத்ரிநாத் கோவிலுக்கு அரிய வகை பசுக்களை நன்கொடையாக அளித்துள்ளார். #BadrinathTemple
கோபேஷ்வர்,
உத்தரகாண்டின் பத்ரிநாத் நகரில் பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது. வைணவ தலம் ஆன இங்கு விஷ்ணு பகவான் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். இங்குள்ள இறைவன் சிலைக்கு சன்வார் வகை பசுக்களின் பால் கொண்டு அபிசேகம் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.
இந்த வகை பசுக்கள் மிக உயர்ந்த பகுதியான லே லடாக் பகுதி தவிர்த்து வேறு எங்கும் காணப்படவில்லை. இதனால் இந்த அரிய வகை பசுக்கள் புனிதம் நிறைந்தவை என பத்ரிநாத், கேதார்நாத் கோவில் குழு தலைமை செயல் அதிகாரி பி.டி. சிங் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் இளைய மருமகளான அபர்ணா யாதவ் கடந்த வருடம் கோவிலுக்கு வந்து சென்றுள்ளார். அவர் இந்த வகை பசுக்களை கோவிலுக்கு நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளார்.
கோவில் அருகே பசுக்களை வைத்து பராமரிக்க சிறப்பு கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு முதலில் 3 பசுக்கள் வைத்து வளர்க்கப்படும் என சிங் கூறியுள்ளார்.