ராகுல் காந்தி ‘இந்தியாவின் மிகப்பெரிய கோமாளி’ சந்திரசேகர் ராவ் கேலி


ராகுல் காந்தி ‘இந்தியாவின் மிகப்பெரிய கோமாளி’ சந்திரசேகர் ராவ் கேலி
x
தினத்தந்தி 6 Sep 2018 12:21 PM GMT (Updated: 6 Sep 2018 12:21 PM GMT)

தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் மாநில சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரை செய்துள்ள முதல்வர் சந்திரசேகர் ராவ், தேர்தலில் போட்டியிடும் தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதியின் 105 வேட்பாளர்களையும் (மொத்தம் 119 தொகுதிகள்) அதிரடியாக அறிவித்துள்ளார். தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் ஆட்சிக்காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் உள்ளது.  இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஷ்கார் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களின் சட்டசபை தேர்தலோடு சேர்த்து தெலுங்கானா மாநில தேர்தலையும் நடத்த சந்திரசேகர் ராவ் விரும்புகிறார். 

தெலுங்கானா சட்டசபையை கலைக்கப்பட்டதற்கான முறைப்படியான அறிவிப்பை ஆளுநர் நரசிம்மன் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநரிடம் பரிந்துரையை சமர்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர் ராவ், தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என கூறியுள்ளார். தெலுங்கானாவில் 2014-ம் ஆண்டுக்கு முன்னர் குண்டு வெடிப்புகள், மின்சார பிரச்சனைகள் மதவாத மோதல்கள் இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இவை கிடையாது. இப்போது களத்திற்குவர காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், பொதுமக்கள் அவர்களுக்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள். ராகுல் காந்தி இந்தியாவின் மிகப்பெரிய கோமாளி என்பது அனைவருக்கும் தெரியும். மோடி அருகே சென்று அவரை கட்டிபிடித்து மற்றும் கண் அடித்ததை இந்தியாவே பார்த்தது. ராகுல் காந்தி எங்களுக்கு ஒரு சொத்து, அவர் தெலுங்கானாவில் கால் வைத்தாலே எங்களுக்கு வெற்றிதான் என கூறியுள்ளார்.   
 
100 சதவிதம் நாங்கள் மதசார்பற்ற கட்சி எப்படி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடியும்? என கேள்வியை எழுப்பிய சந்திரசேகர் ராவ், நாங்கள் தேர்தலில் தனியாக போட்டியிடப்போகிறோம், மஜ்லிஸ் இத்தேஹதுல் முஸ்லிமீன் கட்சி (எம்.ஐ.எம்) எங்களுடைய நண்பர்கள் என்பதில் ஐயம் கிடையாது என கூறியுள்ளார். 

Next Story