அயோத்தி தொடர்பான வழக்கை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்


அயோத்தி தொடர்பான  வழக்கை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 29 Oct 2018 6:41 AM GMT (Updated: 29 Oct 2018 6:41 AM GMT)

அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் அமர்வில் அக்டோபர் 29-ந் தேதி (இன்று) விசாரிக்கப்படும் என கடந்த மாதம் 27-ந் தேதி, அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அறிவித்தது.

அதன்படி அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியின் உரிமை தொடர்பான இந்த சிவில் வழக்கு இன்று (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகள்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி தொடர்பான வழக்கு ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும், இறுதி விசாரணை நடைபெறும் தேதி ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Next Story