சபரிமலை பாதுகாப்பு பணியில் இருந்து எஸ்.பி யாதிஷ் சந்திரா மாற்றம்


சபரிமலை பாதுகாப்பு பணியில் இருந்து எஸ்.பி யாதிஷ் சந்திரா மாற்றம்
x
தினத்தந்தி 27 Nov 2018 5:22 AM GMT (Updated: 27 Nov 2018 5:22 AM GMT)

சபரிமலை பாதுகாப்பு பணியில் இருந்து எஸ்.பி யாதிஷ் சந்திரா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம், 

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரள மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்து அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலை மகரவிளக்கு சீசன் தொடங்கிவிட்டதால், பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்ல கடும் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் போலீசார் விதித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையால், பம்பையில் வாகனங்களை நிறுத்தும் இடம் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால், அதற்குப் பதிலாக அடிவாரப் பகுதியான நிலக்கலில் வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தக் கூறியுள்ளார்.

அதன்பின் பக்தர்கள் அனைவரும் தங்களின் சொந்த வாகனத்தில் செல்ல முடியாது. கேரள அரசுப் பேருந்தில் தான் செல்ல முடியும். மேலும் இரவு நேரத்தில் சன்னிதானத்திலும் பக்தர்கள் தங்குவற்கு கடும் கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்துள்ளனர். ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு கடுமையான கெடுபிடிகள் காட்டப்படுவதாக கூறப்படுகிறது. 

கடந்த வாரம் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற போது நிலக்கல் பகுதியில் அவருடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி., யாதீஷ் சந்திரா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்பு  போராட்டம் நடத்தப்பட்டது. எனினும், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட ஆளும் தரப்பு  எஸ்.பி., செய்தது சரி தான் என்று விளக்கம் அளித்தனர்.

இந்த சூழ்நிலையில், நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட புதிய போலீஸ் குழுவை கேரள அரசு அறிவித்துள்ளது. அதன்படி உளவுத்துறை ஐ.ஜி., அசோக் யாதவ் தலைமையில் புதிய போலீஸ் குழு நிலக்கல் பகுதி பாதுகாப்புக்கு  நியமிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி., யாதீஷ் சந்திரா வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்.


Next Story