சிபிஐ, ஆர்பிஐ, தேர்தல் ஆணையம் மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு - ராகுல் காந்தி


சிபிஐ, ஆர்பிஐ, தேர்தல் ஆணையம் மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 10 Dec 2018 1:34 PM GMT (Updated: 10 Dec 2018 1:34 PM GMT)

சிபிஐ, ஆர்.பி.ஐ, தேர்தல் ஆணையம் மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.


புதுடெல்லி,

மத்திய அரசுடன் அதிகார மோதல் தொடர்பான பிரச்சினை இருந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் திடீரென பதவி விலகியுள்ளார். ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் சுய அதிகாரம் பிரச்சனையை பாராளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. பா.ஜனதாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு அனைத்து அரசு முகமைகளை சிதைக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் இந்நகர்வு ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தும் என பார்க்கப்படுகிறது. 

மத்திய அரசுக்கும் உர்ஜித் படேலுக்கும் இடையே உரசல் என செய்தி வெளியாகியதுமே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “அவரை (பிரதமர் மோடி) எதிர்த்து நில்லுங்கள் படேல் (உர்ஜித் படேல்) நாட்டைக் காப்பாற்றுங்கள்”  என கேட்டுக்கொண்டிருந்தார்.  

ராகுல் காந்தி கருத்து

இப்போது உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது உர்ஜித் படேல் ராஜினாமா செய்தி எங்களுக்கு தெரியவந்தது. மத்திய அரசுடன் இனி இணைந்து பணியாற்ற முடியாது என்று அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. அப்போது சிபிஐ, ஆர்.பி.ஐ. தேர்தல் ஆணையம் மற்றும் அரசியலமைப்பு போன்ற நம்முடைய அரசு நிறுவனங்கள் மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுத்து நிறுத்தவேண்டும் என்று ஒருமித்த சம்மதம் தெரிவிக்கப்பட்டது,” என்று கூறியுள்ளார் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.


Next Story