ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் பட்டாசுகளுடன் குவிந்த தொண்டர்கள்
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு பட்டாசுகளுடன் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
ஜெய்பூர்,
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு கடந்த 7ந்தேதி ஓட்டு பதிவு நடந்து முடிந்தது. இதில் 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
இங்கு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.
ஓட்டு எண்ணும் 40 மையங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன என தேர்தல் துறையின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் கட்சி வெற்றியடைந்த பின்னரே பாரம்பரிய தலைப்பாகையை அணிவேன் என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் பிரசாரத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். வாக்கு எண்ணிக்கையில் டோங்க் தொகுதியில் அவர் முன்னிலை வகிக்கிறார்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு பட்டாசுகளுடன் காலையிலேயே தொண்டர்கள் குவிந்து உள்ளனர்.
Related Tags :
Next Story