அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி யூயூ லலித் விலகல், விசாரணை 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி யூயூ லலித் விலகல், விசாரணை 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 10 Jan 2019 6:30 AM GMT (Updated: 10 Jan 2019 6:30 AM GMT)

அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி யூயூ லலித் விலகியுள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி தொடர்பான வழக்கில் கடந்த 2010 ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, 2019 ஜனவரி முதல் வாரம் உரிய அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்தது. 

இதன்படி, இந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.ஏ பாப்டே, என்.வி ரமணா, யூயூ லலித், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு, எப்போது முதல் விசாரிக்கப்படும் என்பதை இன்று (அக்.10) அறிவிப்போம் என நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். 

இதன்படி, இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் ஜனவரி 29 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கு விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி யூயூ லலித் தானாகவே  விலகிக்கொண்டார். 1997 ஆம் ஆண்டு அயோத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த கல்யாண் சிங்குக்கு ஆதரவாக யூயூ லலித் வழக்கறிஞராக செயல்பட்டதை வழக்கறிஞர் ஒருவர் சுட்டிக்காட்டியதையடுத்து, அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து தன்னை யூயூ லலித் விடுவித்துக்கொண்டுள்ளார். 

Next Story