சபரிமலை சென்ற இருபெண்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் : கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


சபரிமலை சென்ற இருபெண்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் : கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 18 Jan 2019 7:33 AM GMT (Updated: 18 Jan 2019 7:37 AM GMT)

சபரிமலைக்கு சென்ற இருபெண்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28–ந் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.  இதற்கு எதிராக கேரளாவில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா ( 44), பிந்து (42) ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட்டனர். பாதுகாப்பு கருதி, இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர். 

இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனகதுர்கா சென்றார். அப்போது, கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதில் கனகதுர்கா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் கனகதுர்கா அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சபரிமலை கோவில் சென்று வழிபட்ட இரு பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனுவில், “அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், வாரத்தில் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். எங்களுக்கு எதிராக தவறான சொற்களைப் பயன்படுத்துபவர்கள், சமூக வலைதளங்களில் எங்களை விமர்சிப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர்.  

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தலைமையிலான அமர்வு, “ இரு பெண்களுக்கும் 24 மணி நேரமும் போதுமான பாதுகாப்பு வழங்குவது அவசியம். கேரள அரசு, இரு பெண்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும், இரு பெண்களின் பாதுகாப்புக்கு கேரள அரசே பொறுப்பு எனவும் தெரிவித்தது.

Next Story