தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு விருந்து அளித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி


தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு விருந்து அளித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி
x
தினத்தந்தி 2 Feb 2019 11:15 PM GMT (Updated: 2 Feb 2019 9:21 PM GMT)

தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து ராகுல் காந்தி மாணவர்களுக்கு விருந்து அளித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள் தேர்வுகளை எளிதாக கையாள்வது குறித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். அதுமட்டுமின்றி ‘மனதோடு பேசுகிறேன்’ என்று மக்களுடன் வானொலி மூலம் பேசுகிறார்.

இப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடலை தொடங்கி உள்ளார். ‘ராகுல் உடன் உங்கள் எண்ணங்கள்’ என்ற தலைப்பில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படும் மாணவர்களுடன் விருந்துடன் கலந்துரையாடல் நடத்தினார்.

இதில் முதல்கட்டமாக டெல்லி, அசாம், மராட்டியம், கேரளா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 7 இளம் மாணவர்கள் கலந்துகொண்டனர். ராகுல் காந்தி அவர்களுக்கு சீன உணவு விருந்து அளித்தார். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது குறித்து அந்த மாணவர்களின் எண்ணங்களை கேட்டறிந்தார். அவர்கள் கூறும் ஆலோசனைகளில் சிறந்தவை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.

பிரதமர் ஊடகங்கள் வழியாக மக்களுடன் கலந்துரையாடினாலும், ராகுல் காந்தியின் கலந்துரையாடல் மிகவும் தனிப்பட்ட முறையில் நடக்கிறது. இதன்மூலம் மக்களின் எண்ணங்களை அவர் அறிந்துகொள்ள முடிகிறது என்று காங்கிரசார் கூறுகின்றனர்.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் அரசியல் அறிவியல் படிக்கும் மாணவர் பிரதிஷ்தா தேவேஷ்வர் கூறியதாவது:-

‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்பது போன்ற நபர் இல்லை அவர். பிரச்சினைகளை புரிந்துகொள்ளும் முயற்சியாக வெளிப்படையாக கலந்துரையாடலை நடத்தி ஆலோசனைகளை கேட்டார். மிகவும் நட்பான, பணிவான நபர். சொல்லப்போனால் அவர் தனது தட்டில் இருந்து உணவுகளை எனக்கு பரிமாறினார்.

அவர் போன்ற அந்தஸ்தில் உள்ள நபர்களிடம் இருந்து நீங்கள் இதை எதிர்பார்க்க முடியாது. இது உண்மையில் பெரிய அரசியல்வாதிகளுக்கும், சாதாரண மனிதர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை உடைக்கிறது. கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் அனைவரும் அணுகும் வகையில் இருக்க வேண்டும். பார்வை திறன் குறைபாடு உள்ளவர்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றேன். அதை செய்வதாக உறுதி அளித்தார். இவ்வாறு தேவேஷ்வர் கூறினார்.

மும்பை ஐ.ஐ.டி. மாணவர் அபிலாஷ் கர்ரி கூறும்போது, “சீன உணவகத்தில் நாங்கள் உட்கார்ந்திருந்தபோது ராகுல் காந்தி அந்த இடத்துக்கு வந்ததை பார்த்ததும் நாங்கள் வியந்துபோனோம். காங்கிரஸ் கட்சியுடன் கலந்துரையாடல் என்று தான் கூறினார்கள், ஆனால் அது கட்சியின் தலைவர் என்று நாங்கள் கருதவில்லை. அனைவரும் கற்கும் வகையில் கல்வி கட்டணத்துக்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்” என்றார்.

திருநங்கையர் உரிமைக்கான சமூக ஆர்வலரான என்ஜினீயரிங் மாணவர் ரோஹன் ரெஜெ மாத்யூஸ், சமத்துவத்தை உணர்த்தும் வகையில் திருநங்கைகளுக்கு பாலின பாகுபாடு இல்லாத கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும். வாடகைத் தாய் சட்டங்கள், திருமண சட்டங்கள் குறித்து கூறியதாக தெரிவித்தார்.

டாடா இன்ஸ்டிடியூட் சமூக அறிவியல் மாணவர் குணால் ராம்தேகே, சாதி ரீதியிலான பாகுபாட்டை நீக்க வேண்டும் என்றார். ஷெமைலா அலிகான் என்ற டெல்லி மருத்துவ மாணவி, முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள பெண்களின் கல்வி தொடர்பான பிரச்சினைகளை அவரிடம் கூறியுள்ளேன் என்றார்.

அனில்குமார் மவுரியா என்ற ஆக்ரா சட்டக்கல்லூரி மாணவர், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி கூறினேன் என்றார்.

இதேபோன்று அவ்வப்போது மாணவர்கள் குழுக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடுவார் என கூறப்படுகிறது.

Next Story