நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படம் - ஜனாதிபதி திறந்து வைத்தார்
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். 1996-ம் ஆண்டு 13 நாட்களும், 1998 முதல் 1999 வரையிலான காலக்கட்டத்தில் 13 மாதங்களும், 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் என மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார்.
இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வாஜ்பாய் பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி மக்களவை சபாநாயர் சுமித்ரா மகாஜன், துணை சபாநாயகர் தம்பித்துரை, காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டிற்கு பெரும் பங்கு ஆற்றிய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை நாடாளுமன்றத்தில் திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் திரு உருவ படங்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story