மத்திய அரசின் தடைக்கு பின் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்க தலைவர்களின் சொத்துகள் முடக்கம்


மத்திய அரசின் தடைக்கு பின் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்க தலைவர்களின் சொத்துகள் முடக்கம்
x
தினத்தந்தி 2 March 2019 6:47 AM GMT (Updated: 2 March 2019 6:47 AM GMT)

காஷ்மீரில் மத்திய அரசின் தடையை தொடர்ந்து ஜமாத்-இ-இஸ்லாமி இயக்க தலைவர்களின் சொத்துகள் அதிகாரிகளால் இன்று முடக்கப்பட்டு உள்ளன.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இதன்பின்னர் காஷ்மீரில் பிரிவினைவாத கட்சியை சேர்ந்த 5 தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் போலீசார் பிரிவினைவாத கட்சியின் தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.  இதில் ஏறக்குறைய 100 பேர் கைது  செய்யப்பட்டனர். அதில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் அப்துல் ஹமிது பியாஸ், செய்தித்தொடர்பாளர் ஜாஹித் அலி ஆகியோரும் அடங்குவர்.

ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு கடந்த காலங்களில் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி கடந்த 1990களில் தடை செய்யப்பட்டு பின்னர் 1995ம் ஆண்டு தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், ஜமாத்-இ-இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கும், தீவிரவாத அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், மாநிலத்தில் பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடுவதிலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த அமைப்புக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், "ஜம்மு காஷ்மீரில்  செயல்பட்டு வந்த ஜமாத்-இ-இஸ்லாமி ஜம்மு அன்ட் காஷ்மீர் அமைப்பு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் தடை செய்யப்படுகிறது. தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு இருப்பதும், தீவிரவாத செயல்களுக்கு உதவி செய்வதும், மாநிலத்தில் பிரிவினையை தூண்டிவிடவும் முயல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தேசத்தில் பிரிவினைக்கு முயன்று, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளுடன் கைகோர்த்து செயல்படுகிறது. இதனால், மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆதலால், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை தடை செய்கிறோம்" என தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பல தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட சொத்துகள் நகரில் பல்வேறு பகுதிகளில் முடக்கப்பட்டு உள்ளன.  வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த இயக்கத்தின் தலைவர்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள் பட்டியலை மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் கேட்டுள்ளனர்.

எனினும், இந்த இயக்கத்தின் மீது மத்திய அரசு விதித்த தடையால் இந்த நடவடிக்கையா அல்லது பணமோசடி வழக்குகள் மீது தேசிய புலனாய்வு முகமை நடத்தி வரும் விசாரணையால் இந்த நடவடிக்கையா என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

Next Story