இந்தியாவிற்கு எதிராக ஜெஎப் 17 தண்டர் விமானத்தைதான் பயன்படுத்தினோம் - பாகிஸ்தான் ராணுவம்


இந்தியாவிற்கு எதிராக ஜெஎப் 17 தண்டர் விமானத்தைதான் பயன்படுத்தினோம் - பாகிஸ்தான் ராணுவம்
x
தினத்தந்தி 25 March 2019 11:49 AM GMT (Updated: 25 March 2019 11:49 AM GMT)

இந்தியாவிற்கு எதிராக ஜெஎப் 17 தண்டர் விமானத்தைதான் பயன்படுத்தினோம் என பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்களை குண்டுவீசி அழித்துவிட்டு கடந்த மாதம் 26-ம் தேதி திரும்பியது. இதையடுத்து, இந்தியாவிற்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. அமெரிக்கா அளித்த எப்-16 ரக போர் விமானங்களை பயன்படுத்தி இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் விமானப்படைகள் நுழைந்தன. அப்போது இந்தியா கொடுத்த பதிலடியில் எப்-16 ரக போர் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது என விமானப்படை தெரிவித்தது.

இந்த எப் 16 ரக போர் விமானங்களை பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்குதான் பயன்படுத்த வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்து இருந்தது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தியது. இது தொடர்பாக விசாரிப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

இதற்கிடையே இந்தியாவின் தாக்குதலில் எங்களுடைய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என கூறுவது பொய்யான தகவல் என பாகிஸ்தான் பிரசாரம் செய்தது. 

ஒருமாத காலம் வரையில் அமைதி காத்த நிலையில் சீன வல்லுநர்கள் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தியது எங்கள் தயாரிப்பு விமானம் என தகவல் வெளியிட்டனர். இப்போது நாங்கள் சீன தயாரிப்பு ஜெஎப் 17 தண்டர் விமானங்களைதான் இந்தியாவிற்கு எதிராக நிலை நிறுத்தினோம் என பாகிஸ்தான் ராணுவ தளபதி கபூர் ரஷிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். எங்களால் பதிலடியை கொடுக்க முடியும் என்பதை இந்தியாவிற்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறோம் எனவும் குறிப்பிட்டார்.

Next Story