உத்தரபிரதேசத்தில், கடந்த 20 ஆண்டுகளில் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சி வெற்றியை ருசிக்காத 11 தொகுதிகள்


உத்தரபிரதேசத்தில், கடந்த 20 ஆண்டுகளில் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சி வெற்றியை ருசிக்காத 11 தொகுதிகள்
x
தினத்தந்தி 15 April 2019 10:45 PM GMT (Updated: 15 April 2019 9:11 PM GMT)

கடந்த 20 ஆண்டுகளில், உத்தரபிரதேசத்தில் 11 நாடாளுமன்ற தொகுதிகள், சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் வெற்றியை ருசிக்காத தொகுதிகளாக உள்ளன.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில், முலாயம்சிங், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் ஆட்சியில் இருந்த கட்சிகள் ஆகும். தற்போதும் செல்வாக்குடன் திகழும் இக்கட்சிகள், நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைத்துள்ளன.

ஆனாலும், இந்த இரு கட்சிகளும் கடந்த 20 ஆண்டுகளில் வெற்றியையே ருசிக்காத நாடாளுமன்ற தொகுதிகளும் இருப்பது தெரிய வந்துள்ளது.

தலைநகர் லக்னோ, வாரணாசி, அமேதி, ரேபரேலி, பாக்பத், பரேலி, பிலிபிட், கான்பூர், மதுரா, ஹத்ராஸ், குஷிநகர் ஆகிய 11 தொகுதிகள்தான் அவை.

இவற்றில், அமேதி, ரேபரேலி ஆகியவை பல தலைமுறைகளாக இந்திராகாந்தி குடும்பத்தினர் கைவசம் உள்ள தொகுதிகள்.

தலைநகரான லக்னோ தொகுதி, பா.ஜனதாவுக்கு செல்வாக்கானது. அங்கு 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவின் லால்ஜி தாண்டனும், 2014-ம் ஆண்டு தேர்தலில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் வெற்றி பெற்றனர். தற்போதைய தேர்தலில் ராஜ்நாத் சிங் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

கான்பூர் தொகுதியில், 1999-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டுவரை நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கைப்பற்றினார்.

தற்போது, ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலை எதிர்த்து பா.ஜனதா சார்பில் உத்தரபிரதேச மந்திரி சத்யதேவ் பச்சோரி போட்டியிடுகிறார். சமாஜ்வாடி கட்சி, ராம் குமார் என்பவரை நிறுத்தி உள்ளது.

வாரணாசியில், 1999-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவை சேர்ந்த சங்கர் பிரசாத் ஜெய்ஸ்வாலும், 2004-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரசை சேர்ந்த ராஜேஷ் குமார் மிஸ்ராவும், 2009-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷியும் வெற்றி பெற்றனர். 2014-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி கைப்பற்றினார். தற்போது, அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.

பாக்பத் தொகுதியில், பா.ஜனதாவின் சத்யபால் சிங்கை எதிர்த்து, சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் ராஷ்டிரீய லோக்தளம் வேட்பாளர் ஜெயந்த் சவுத்ரி களம் காண்கிறார். அதே கட்சி வேட்பாளர் குன்வர் நரேந்திரசிங், மதுராவில் பா.ஜனதா எம்.பி. ஹேமமாலினியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

பிலிபிட் தொகுதியில், 1999, 2004, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பா.ஜனதாவை சேர்ந்த மேனகா காந்தி வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு தேர்தலில், அவருடைய மகன் வருண் காந்தி வெற்றி பெற்றார். தற்போது, அவர் மீண்டும் போட்டியிடுகிறார். சமாஜ்வாடி கட்சி சார்பில் ஹேம்ராஜ் வர்மா போட்டியிடுகிறார்.

பரேலி தொகுதியில், மத்திய மந்திரி சந்தோஷ் கங்க்வார், 1999-ம் ஆண்டு தேர்தலில் இருந்து (2009-ம் ஆண்டைத் தவிர) தொடர்ந்து எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறார். தற்போது அவர் மீண்டும் வேட்பாளராக நிற்கிறார். அவரை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி சார்பில் முன்னாள் மந்திரி பகவத் சரண் கங்க்வார் போட்டியிடுகிறார்.

மேற்கண்ட 11 தொகுதிகளிலும் கடந்த 20 ஆண்டுகளாக வெற்றி பெறாத மர்மம் என்ன? என்று கேட்டதற்கு சமாஜ்வாடி கட்சி சட்ட மேலவை உறுப்பினர் ராஜ்பால் காஷ்யப் கூறியதாவது:-

அரசியலில் எதையும் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. நிலைமை மாறி வருகிறது. இந்த தேர்தலில் கூட்டணி காரணமாக சூழ்நிலை மாறி இருப்பதால், எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

மேலும், மத்தியில் உள்ள அரசை அகற்ற உத்தரபிரதேச மக்கள் விரும்புவதாலும், நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாலும் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரபிரதேசத்தில், பட்டியல் இனத்தவர் 22 சதவீதம் பேரும், பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீதம் பேரும், இஸ்லாமியர்கள் 19 சதவீதம் பேரும் உள்ளனர்.

இந்த ஓட்டுகள், சமாஜ்வாடி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் விழக்கூடிய பாரம்பரிய வாக்குகள். அத்துடன், முன்னாள் மத்திய மந்திரி அஜித் சிங் தலைமையிலான ராஷ்டிரீய லோக்தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பதால், சாதி கணக்குப்படி, கணிசமான தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் நம்புகின்றன.


Next Story