திருப்பதி அருகே தூக்கில் தொங்குவதுபோல் வீடியோ எடுத்தவர் சேலை இறுக்கி சாவு


திருப்பதி அருகே  தூக்கில் தொங்குவதுபோல் வீடியோ எடுத்தவர் சேலை இறுக்கி சாவு
x
தினத்தந்தி 23 April 2019 10:00 PM GMT (Updated: 23 April 2019 9:58 PM GMT)

திருப்பதி அருகே நண்பருக்கு அனுப்ப, தூக்கில் தொங்குவதுபோல் ‘செல்பி வீடியோ’ எடுத்த மெக்கானிக் கழுத்தில் சேலை இறுக்கியதில் பரிதாபமாக இறந்தார்.

திருப்பதி,

திருப்பதி அருகே திருச்சானூரை அடுத்த டாமினேடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தவர் சிவக்குமார் (வயது 25). இவர், திருப்பதியில் உள்ள மோட்டார்சைக்கிள் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருடைய பெற்றோர் திருப்பதியை அடுத்த கரகம்பாடி மங்களம் பகுதியில் வசித்து வருகின்றனர். சிவக்குமார் மட்டும் வீட்டில் தனியாக தங்கி, தினமும் வேலைக்குச் சென்று வந்தார்.

நேற்று முன்தினம் காலை அவர் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்து மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் ‘செல்பி’ மோகம் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்வதுபோல் செல்பி வீடியோ எடுத்து, நண்பர் சிவாவுக்கு அனுப்ப முடிவு செய்தார். அதன்படி வீட்டின் மின்விசிறியில் சேலையை போட்டு ஒரு காலை கட்டில் மீதும், மற்றொரு காலை மேஜை மீதும் வைத்து, சேலையை முடிச்சுப்போட்டு கழுத்தில் கட்டிக்கொண்டார்.

பின்னர் ‘செல்பி வீடியோ’ எடுத்த படத்தை தனது நண்பருக்கு அனுப்பினார். அப்போது கீழே இறங்கும்போது திடீரென அவரது கால் தவறியது. இதனால் கழுத்தில் கட்டியிருந்த சேலை கழுத்தில் இறுக்கியதில் சிவகுமார் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நண்பர் தற்கொலை செய்வதுபோல் வந்த செல்பி வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவா, உடனே சிவக்குமாருக்கு போன் செய்தார். அவர், செல்போனை எடுக்கவில்லை.

அதிர்ச்சி அடைந்த சிவா, சிவக்குமார் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து திருச்சானூர் போலீசாருக்கு சிவா தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிவக்குமாரின் பிணத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story