வெற்றியோ, தோல்வியோ மோடியை எதிர்த்து போட்டியிட பிரியங்கா தயார்


வெற்றியோ, தோல்வியோ மோடியை எதிர்த்து போட்டியிட பிரியங்கா தயார்
x
தினத்தந்தி 24 April 2019 10:30 AM GMT (Updated: 24 April 2019 11:27 AM GMT)

வெற்றியோ, தோல்வியோ வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என கட்சி தலைமையிடம் பிரியங்கா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #PriyankaGandhi #Varanasi #Congress #2019Elections

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். உத்தரபிரதேச மாநில கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அரசியலுக்கு பிரியங்கா வரவேண்டும் என்ற தொண்டர்களின் கோரிக்கை நிறைவேறி விட்டது. இதேபோன்று தேர்தலில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. 

 சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சோனியாவையே மீண்டும் காங்கிரஸ் களமிறக்கியது. ரேபரேலியில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில்  பிரியங்கா பேசிய போது, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தினர். அப்போது பிரியங்கா “வாரணாசியில் போட்டியிட வேண்டாமா?” என்ற பதில் கேள்வியை எழுப்பினார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். பிரியங்காவின் அரசியல் வருகையை எதிர்க்கட்சிகள் வரிசையில் இருக்கும் பகுஜன் சமாஜ் விமர்சனம் செய்கிறது. சமாஜ்வாடி அமைதி காக்கிறது.

வாரணாசியில் போட்டியிட பிரியங்கா ஆர்வமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிய தொடங்கி விட்டது. ஆனால் பிரியங்காவின் போட்டி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என காங்கிரஸ் உயர்மட்ட தகவல்கள் தொடர்ந்து கூறியது. “கட்சி தலைமை கேட்டுக் கொண்டால் போட்டியிட தயார்” என பிரியங்கா கூறி விட்டார். அரசியலுக்கு பிரியங்கா வந்துள்ளதால் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என காங்கிரஸ் பார்ப்பதாகவும், வாரணாசி அதற்கு சரியான இடமாக இருக்குமா? என்று ஆய்வு செய்வதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் வாரணாசியில் பிரியங்கா போட்டியிடலாம் என்றே பார்க்கப்படுகிறது. அதற்கு 50:50 பகுதி வாய்ப்பு இருப்பதாகவும், இவ்விவகாரம் தொடர்பாக உயர்மட்ட அளவில் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பிரியங்கா தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்து விட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனக்கு வெற்றி, தோல்வியை  பற்றியெல்லாம் கவலை  கிடையாது என  ஸ்திரமாக பிரியங்கா தெரிவித்து விட்டதாக தெரிகிறது.

உ.பி.யில் மகா கூட்டணியின் சார்பில் சமாஜ்வாடியின் தரப்பில் வாரணாசியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா போட்டியிட்டால் அவர்கள் தங்களுடைய வேட்பாளரை திரும்ப பெறுவார்களா? என்பது தெளிவாகவில்லை. ராகுலின் அமேதி தொகுதி மற்றும் சோனியாவின் ரேபரேலி தொகுதியில் இந்த மகா  கூட்டணி வேட்பாளரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story