6 சர்ஜிக்கல் தாக்குதல்களை நடத்தியதாக கூறும் காங்கிரஸ், பொய் என்கிறார் பிரகாஷ் ஜவடேகர்


6 சர்ஜிக்கல் தாக்குதல்களை நடத்தியதாக கூறும் காங்கிரஸ், பொய் என்கிறார் பிரகாஷ் ஜவடேகர்
x
தினத்தந்தி 3 May 2019 8:09 AM GMT (Updated: 3 May 2019 9:51 AM GMT)

6 சர்ஜிக்கல் தாக்குதல்களை நடத்தியதாக காங்கிரஸ் கூறியது பொய் என்று பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் 6 முறை சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாக அக்கட்சி கூறியது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா, நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, 2008 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 6 முறை சர்ஜிக்கல் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கூறினார். 

மேலும், அரசியல் லாபத்துக்காக ராணுவ நடவடிக்கைகளை ஒருபோதும் எடுக்க  நாங்கள் முற்படவில்லை என்றும் ராஜீவ் சுக்லா கூறியிருந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பலமுறை தனது ஆட்சி காலத்தில் சர்ஜிக்கல் தாக்குதல்  நடத்தப்பட்டதாக கூறியிருந்ததை தொடர்ந்து ராஜீவ் சுக்லாவும் இதை வழிமொழிந்து பேசினார்.

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய  அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் காங்கிரஸ் கூறுவது பொய் எனக்கூறி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

மேலும் அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது, முதல் சர்ஜிக்கல் தாக்குதல் என்பது 2016-ல் தான் நடத்தப்பட்டது என தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்கப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் மேலும் ஒரு பொய்யை கூறியுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாக காங்கிரஸ் கூறியதை விமர்சித்து இருந்தார். அருண் ஜெட்லி கூறும்போது, காங்கிரஸ் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் கண்ணுக்கு தெரியாததும், யாரும் அறிந்திராததுமாக இருந்தது” என்று கூறியிருந்தார்.

Next Story