நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் 5 பேர் கடத்தல் - மீட்க மத்திய அரசு நடவடிக்கை


நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் 5 பேர் கடத்தல் - மீட்க மத்திய அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 7 May 2019 9:15 PM GMT (Updated: 7 May 2019 7:51 PM GMT)

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் 5 பேர் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எம்.டி. அபெக்கஸ் என்ற எண்ணெய் கப்பலில் மாலுமிகளாக சென்றபோது கடற்கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். கடத்தப்பட்டுள்ள மாலுமிகளில் ஒருவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதீப் குமார் சவுத்ரி.

இவரது மனைவி பாக்யஸ்ரீ தாஸ், இது தொடர்பாக டுவிட்டர் வழியாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜின் கவனத்துக்கு கடந்த 29-ந் தேதி கொண்டு சென்றார். தனது கணவர் உள்ளிட்ட 5 மாலுமிகளையும் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொண்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, நைஜீரியாவில் உள்ள இந்திய தூதர் அபய் தாக்குரை சுஷ்மா சுவராஜ் தொடர்பு கொண்டு, கடத்தப்பட்டுள்ள இந்திய மாலுமிகள் 5 பேரையும் மீட்கும் விவகாரத்தை, அந்த நாட்டு அரசிடம் எடுத்துச்செல்லுமாறு கேட்டுக்கொண்டார். இதுபற்றி அறிக்கை அனுப்புமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Next Story