எப்-16 போர் விமானங்களை எல்லையில் பல்வேறு இடங்களில் நிறுத்தி உள்ள பாகிஸ்தான்


எப்-16 போர் விமானங்களை எல்லையில்  பல்வேறு இடங்களில் நிறுத்தி உள்ள பாகிஸ்தான்
x
தினத்தந்தி 20 May 2019 6:18 AM GMT (Updated: 20 May 2019 6:18 AM GMT)

பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எப்-16 போர் விமானங்களை எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் குவித்துள்ளது.

புதுடெல்லி

பாலகோட் தாக்குதல் நடைபெற்று 43 நாட்கள் கழித்து, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் செயல்படும் சர்வதேச ஊடகங்களை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடும் அந்தப் பகுதிக்கு பாகிஸ்தான்  அழைத்துச்சென்றது. இந்தப் பயணத்தின்போது சில வெளிநாட்டு அதிகாரிகளும், சில நாடுகளின் தூதுவர்களும் உடன் இருந்தனர். 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை விமானங்கள் பிப்ரவரி இறுதியில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பெரும் இழப்பு நேரிட்டதாக கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என கூறிவருகிறது. இதற்கிடையே இந்திய விமானப்படை தாக்குதலை அடுத்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் டாங்கிகளை குவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி, எப்-16 போர் விமானங்களை முக்கியமான விமானப்படை தளங்களில் இருந்து வேறுஇடங்களுக்கு கொண்டு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா தாக்குதல் நடத்தி இரண்டரை மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து உச்சபட்ச உஷார் நிலையிலேயே உள்ளது. இந்நிலையில், எப்-16 போர் விமானங்களை, பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் விமானப்படை தளங்களில் இருந்து அவற்றின் துணை நிலையங்களுக்கு கொண்டு சென்று ஆங்காங்கே பாகிஸ்தான் விமானப்படை நிறுத்தி வைத்துள்ளது.

பாகிஸ்தானின் எப்-16 போர் விமானங்கள், அத்துமீறி இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த சம்பவத்திற்கு இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதிலடி  கொடுக்கக்கூடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் உள்ளது. அப்படி ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், ஒரே தாக்குதலில் எப்-16 விமானங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டுவிடுவதை தவிர்க்க பாகிஸ்தான் அவற்றை வேறு இடங்களுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story