சுப்ரீம் கோர்ட்டில் 4 நீதிபதிகள் பதவி ஏற்பு


சுப்ரீம் கோர்ட்டில் 4 நீதிபதிகள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 24 May 2019 9:55 PM GMT (Updated: 24 May 2019 9:55 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக 4 நீதிபதிகள் நேற்று பதவி ஏற்றனர்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 31 நீதிபதிகள் பணியிடம் உள்ளன. இதில் தலைமை நீதிபதி உள்பட 27 பேர் பதவியில் இருந்தனர். மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்காக 4 நீதிபதிகளின் பெயரை கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், போபண்ணா ஆகியோரின் பெயரை மத்திய அரசு நிராகரித்தது. இதையடுத்து கடந்த 8-ந் தேதி மீண்டும் அவர்களின் பெயரை கொலீஜியம் பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தது.

அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் 31 நீதிபதிகள் பணியிடமும் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அனிருத்தா போஸ், கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி போபண்ணா, இமாசல பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கவாய் ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று காலை நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த், அனிருத்தா போஸ், போபண்ணா ஆகியோர் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர்களில் நீதிபதி கவாய் 2025-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். அவருக்கு பின்னர் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சூர்யகாந்த் தலைமை நீதிபதியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு 31 நீதிபதிகள் பணியிடமும் நிரப்பப்பட்டது. தற்போது மீண்டும் 31 இடங்கள் நிரம்பி சுப்ரீம் கோர்ட்டு முழு பலத்தை அடைந்துள்ளது.



Next Story