4 மாதங்களில் ஜம்மு காஷ்மீரில் 61 பாதுகாப்பு படைவீரர்கள், 11 பொதுமக்கள் கொலை
கடந்த 4 மாதங்களில் ஜம்மு காஷ்மீரில் 61 பாதுகாப்பு படையினர் மற்றும் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ரோஹித் சவுத்ரி என்ற சமூக ஆர்வலர் தகவலறியும் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில் 2019 ஜனவரியிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களில் ஜம்மு காஷ்மீரில் 177 தீவிரவாதம் தொடர்பான சம்பவங்கள் நடைபெற்றன என்றும், அதில் 61 பாதுகாப்பு படை வீரர்கள், 11 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 142 பேர் காயமடைந்துள்ளதும் அந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதனிடையே இந்த ஆண்டில் 86 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக லெப்டினெண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் தெரிவித்தார். ஜம்முவில் உள்ள உதம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், நடப்பாண்டில் 86 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 20 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். தீவிரவாதிகளுக்கு எதிரான தங்கள் தேடுதல் வேட்டைகள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story