ராஜினாமாவை தடுத்து நிறுத்த டெல்லியில் ராகுல்காந்தி வீட்டின் முன் தர்ணா- ஷீலா தீட்சித்


ராஜினாமாவை தடுத்து நிறுத்த  டெல்லியில்  ராகுல்காந்தி வீட்டின் முன் தர்ணா- ஷீலா தீட்சித்
x
தினத்தந்தி 29 May 2019 8:26 AM GMT (Updated: 29 May 2019 8:26 AM GMT)

ராகுல்காந்தியின் ராஜினாமாவை தடுத்து நிறுத்த டெல்லியில் அவர் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபடுகிறார் ஷீலா தீட்சித்.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீத இடங்களை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. வெறும் 52 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்ற நிலையில், கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார்.

தோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் கடந்த 25-ந் தேதி நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா முடிவை அறிவித்தார். ஆனால் அதை காாரியக்கமிட்டி ஏற்க மறுத்து விட்டது. அத்துடன் கட்சி நிர்வாகத்தை முழுமையாக மாற்றி அமைக்க அவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவில்லை. கடந்த 2 நாட்களாக கட்சித்தலைவர்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை.

தனது குடும்பத்தை சேர்ந்த யாரையும் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கக்கூடாது, தனது குடும்பத்துக்கு வெளியே இருந்து புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என அவர் மூத்த தலைவர்களிடம் உறுதிபட தெரிவித்து உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி ஷீலா தீட்சித் கூறும் போது,  ராகுல் காந்தியின் இல்லத்திற்கு அருகே நாங்கள்  தர்ணா இருக்கப்போகிறோம், அவர் ராஜினாமா செய்யக்கூடாது என்று எங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டுவோம். நாம் விரும்பாத மிகப்பெரிய இழப்பு கட்சிக்கு ஏற்படும். இதைச் செய்ய வேண்டாம்  நாங்கள் அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறோம் என கூறினார்.

Next Story