நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் இருந்து விலகல்


நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் இருந்து விலகல்
x
தினத்தந்தி 2 Jun 2019 11:31 AM GMT (Updated: 2 Jun 2019 7:12 PM GMT)

மத்திய நிதியமைச்சராக பொறுப்பு ஏற்ற நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த, காங்கிரஸ் கட்சியின் சமூகஊடகப் பிரிவு தலைவர் திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் இருந்து விலகினார்.



பிரதமர் மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திரா காந்திக்கு அடுத்தப்படியாக நிதியமைச்சர் பதவியை வகிக்கும் பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் சமூகஊடகப் பிரிவு தலைவர் திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சரான செய்தியை பகிர்ந்து தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். 
 
1970-ம் ஆண்டுக்குபின்னர் நிதித்துறைக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் அமைச்சரான உங்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டின பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இல்லை. அதை மேம்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். எங்களால் முடிந்த ஒத்துழைப்பு அளிப்போம் என திவ்யா பதிவு செய்து இருந்தார். இந்நிலையில் அவர் டுவிட்டரில் இருந்து விலகியுள்ளார். திவ்யா ஸ்பந்தனாவின் டுவிட்டர் கணக்கு செயல்பாட்டில் இல்லை, கணக்கை அணுகினால் நீக்கப்பட்டுவிட்டது என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டுவிட்டரில் இருந்து திவ்யா ஸ்பந்தனா விலகியதற்கான காரணம் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. ஏற்கனவே ஒரு மாதத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் தொலைக்காட்சிகளில் விவாதங்களில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story