மகாத்மா காந்திக்கு எதிராக டுவிட்டரில் சர்ச்சை பதிவு; பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி இடமாற்றம்


மகாத்மா காந்திக்கு எதிராக டுவிட்டரில் சர்ச்சை பதிவு; பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி இடமாற்றம்
x
தினத்தந்தி 3 Jun 2019 12:12 PM GMT (Updated: 3 Jun 2019 12:12 PM GMT)

மகாத்மா காந்திக்கு எதிராக டுவிட்டரில் சர்ச்சை பதிவிட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

மும்பை மாநகராட்சி துணை கமிஷனராக இருந்து வரும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி நிதி சவுத்ரி. இவர் கடந்த மாதம் 17ந்தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்தை பதிவிட்டு இருந்தார். அதில், ‘மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி நடக்கும் கொண்டாட்டங்கள் விதி விலக்கானவை.

நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தியின் உருவத்தை நீக்கும் நேரமிது. உலகம் முழுவதும் உள்ள அவரது சிலைகள் அகற்றப்பட வேண்டும். நிறுவனங்கள் மற்றும் சாலைகளுக்கு சூட்டப்பட்டு இருக்கும் அவரது பெயர் மாற்றப்பட வேண்டும். காந்திக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கும். 30.1.1948-க்காக (காந்தியடிகள் கொல்லப்பட்ட தினம்) கோட்சேவுக்கு நன்றி' என தெரிவித்து உள்ளார்.

அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி நிதி சவுத்ரி தனது பதிவை நீக்கி விட்டார்.  மகாத்மா காந்தி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நிதி சவுத்ரிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

ஆனால் தான் கிண்டலாக தெரிவித்த கருத்து திரிக்கப்பட்டு உள்ளது. மகாத்மா காந்தி குறித்து அவதூறாக எதுவும் கூறவில்லை என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி நிதி சவுத்ரி மறுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், “மகாத்மா காந்தியின் சத்திய சோதனை தான் எனது விருப்பமான புத்தகம். நான் ஒரு போதும் காந்தியை அவமதிக்கவில்லை. மகாத்மா காந்தி தான் தேச தந்தை. எனது கருத்து திரித்து கூறப்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது. 2019-ம் ஆண்டில் நமது தேசத்தை தலைசிறந்த நாடாக மாற்ற நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், மகாத்மா காந்திக்கு எதிராக டுவிட்டரில் சர்ச்சை பதிவிட்ட நிதி சவுத்ரி பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Next Story