ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெறுவது கட்டாயம் - நாடாளுமன்றத்தில் தி.மு.க. கேள்விக்கு மந்திரி தர்மேந்திர பிரதான் பதில்


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெறுவது கட்டாயம் - நாடாளுமன்றத்தில் தி.மு.க. கேள்விக்கு மந்திரி தர்மேந்திர பிரதான் பதில்
x
தினத்தந்தி 24 Jun 2019 11:45 PM GMT (Updated: 24 Jun 2019 10:10 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெறுவது கட்டாயம் என நாடாளுமன்றத்தில் தி.மு.க. கேள்விக்கு மந்திரி தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினரின் கேள்விக்கு மந்திரி தர்மேந்திர பிரதான் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெறுவது கட்டாயம் என்று கூறி உள்ளார்.

நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் ஆ.ராசா பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் எழுத்துபூர்வமாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எத்தனை இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்பட உள்ளன? அவ்வாறு தோண்டப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன? அவற்றுக்கு தமிழகம் உள்பட சில இடங்களில் எதிர்ப்புகள் உள்ளனவா? எதிர்ப்புகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை களைவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்று அவர் கேட்டு இருந்தார்.

இதற்கு நாடாளுமன்றத்தில் பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியா முழுவதும் 2019-2020-ம் நிதி ஆண்டில் ஆந்திராவில் 28, அசாமில் 83, அருணாசல பிரதேசத்தில் 2, ராஜஸ்தானில் 107, மத்திய பிரதேசத்தில் 2, குஜராத்தில் 232, திரிபுராவில் 21, ஜார்கண்டில் 24, மேற்கு வங்காளத்தில் 2, தமிழ்நாட்டில் 23 கிணறுகள் உள்பட மொத்தம் 705 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்பட உள்ளன.

இதன் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.31,996 கோடி ஆகும். ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டும் முன்பு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டியது கட்டாய தேவையாகும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதற்கு சில உள்ளூர் மக்களும், சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

நாகாலாந்து மாநிலத்தை பொறுத்தவரை உள்ளூர் மக்களும், சில அமைப்புகளும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான செயல்பாட்டு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். நாகாலாந்து அரசு உரிய அனுமதி வழங்காததால் அங்கு இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

புதுச்சேரியை பொறுத்தவரையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதற்கு, உள்ளூர் மக்களின் எதிர்ப்பை காரணம் காட்டி மாநில அரசு அனுமதி மறுத்துள்ளதால் அங்கேயும் இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா? பிரச்சினைகள் வருமா? நிலத்தடி நீர் பாதிக்கப்படுமா? விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பன போன்ற மக்களின் அச்சங்களை போக்க தொடர்ச்சியாக ஓ.என்.ஜி.சி. (இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்) மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டு உள்ளது.


Next Story