ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு மேலும் 4 வாரங்களுக்கு தடை நீட்டிப்பு


ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு மேலும் 4 வாரங்களுக்கு தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 1 July 2019 6:02 AM GMT (Updated: 1 July 2019 6:02 AM GMT)

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு மேலும் 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் தடையை நீட்டித்துள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி  ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு நேற்று அப்போலோ டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை சுட்டிக்காட்டி ஆணைய விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு  அளிக்குமாறு அப்போலோ நிர்வாகம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.

அப்போது, அப்போலோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே,  ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் ஜூன் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து,  மேலும் 4 மாதம், கால அவகாசத்தை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது கவனிக்கத்தக்கது.

Next Story