மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோவாவுக்கு செல்ல திட்டம்


மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோவாவுக்கு செல்ல திட்டம்
x
தினத்தந்தி 9 July 2019 3:05 AM GMT (Updated: 9 July 2019 3:05 AM GMT)

மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோவாவுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், சபாநாயகரை தவிர்த்து, காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 78 பேர், மதசார்பற்ற ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் 37 பேர், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர், சுயேச்சைகள் 2 பேர் ஆவர்.  எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 பேர் என 14 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். இவர்கள் தனி விமானம் மூலம் மும்பை அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள பெயர் வெளியிடப்படாத நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பாரதீய ஜனதா செய்ததாக காங்கிரஸ்–ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.  இதன் காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை, கவிழாமல் காப்பாற்ற காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புனே நகருக்கு இடம்பெயர்ந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர்.  இதன்பின் கோவாவுக்கு சென்று விடவும் திட்டமிட்டுள்ளனர்.

Next Story