சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தி.மு.க. மனு ‘தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்க்க வேண்டும்’


சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தி.மு.க. மனு ‘தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்க்க வேண்டும்’
x
தினத்தந்தி 12 July 2019 9:17 PM GMT (Updated: 12 July 2019 9:17 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்க்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம், தி.மு.க. மனு அளித்தது.

புதுடெல்லி,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சந்தித்தார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை ஒரே காலத்தில் மொழி பெயர்ப்பு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் தாய்மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து மனு அளித்தார்.

மனுவில் இருப்பது என்ன?

அந்த மனுவில், “சுப்ரீம் கோர்ட்டின் இணையதளத்தில் இந்த மாத இறுதியில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை ஒரே காலத்தில் மொழி பெயர்ப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநில மொழிகளான அஸ்ஸாமி, இந்தி, கன்னடம், மராத்தி, ஒடியா மற்றும் தெலுங்கு ஆகியவற்றுடன் தமிழையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும், “இந்தியா போன்று பல மொழிகள் பேசப்படும் நாட்டில் ஒரே காலத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை மொழி பெயர்ப்பதற்கான மாநில மக்களின் தாய்மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்ப்பதன்மூலம் வழக்காடுபவர்கள் வழக்கின் பிரச்சினைகளை எளிதாகப் புரிந்து கொள்வதை நிச்சயமாக எளிதாக்கும்” எனவும் கூறப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்ப்பதற்கு வலியுறுத்துவதின் முக்கியக் காரணங்கள்:-

* தமிழின் மேன்மையின் காரணமாக 2004-ம் ஆண்டு, பிற இந்திய மொழிகளில் முதலாவதாக செம்மொழித் தகுதி (அந்தஸ்து) வழங்கப்பட்டது. அதற்கு பின்னரே அந்த செம்மொழித் தகுதி பிற மொழிகளுக்கு வழங்கப்பட்டது.

* உலகம் முழுவதும் தமிழ் சுமார் 8 கோடி மக்களால் தமிழ் பேசப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான மக்களால் இன்னமும் ஆற்றல் வாய்ந்த தாய்மொழியாக பேசப்பட்டு வரும் ஒரே புராதன மொழி தமிழே ஆகும்.

* தமிழ்நாட்டின் அலுவல் (ஆட்சி) மொழியாகவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளில் ஒன்றாகவும் தமிழ் உள்ளது. யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது.

சிங்கப்பூரிலும், இலங்கையிலும் அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. மேலும் தமிழ் மொழி, மலேசியா, மியான்மர், கனடா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஏராளமான பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் இது ஒரு சர்வதேச மொழி.

* தாய்மொழிகளின் முதல் பட்டியலில் தமிழ் சேர்க்கப்படுவதன் மூலம், பன்மொழி தன்மையின் நோக்கத்தை மேலும் கொண்டு செல்வதற்கும், அதேபோன்று குறிப்பாக தமிழ்நாட்டில் அம்மொழியை பேசும் மக்களுக்கும், நாடு முழுவதும் தமிழ் மொழி பேசும் பிற மக்களுக்கும் இடையே உடமை தன்மையையும், ஒருமைப்பாட்டையும் சாதிப்பதற்கும், மேலும் சேர்ப்பதற்கும் உதவி செய்யும்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

டி.ஆர்.பாலு தெரிவித்த கருத்துக்களை கேட்டுக்கொண்ட ரஞ்சன் கோகாய், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளை ஒரே காலத்தில் மொழி பெயர்த்து வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் தாய்மொழிகளின் முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்ப்பது குறித்த கோரிக்கையை பரிசீலித்து, விரைவில் நல்ல முடிவை எடுப்பதற்கு கனிவுடன் ஒப்புக் கொண்டார்.

இந்த தகவல்கள், டெல்லியில் உள்ள தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.

Next Story