போலி ஹீரோக்களை தவிர்த்து நிஜ ஹீரோக்களை விரும்புங்கள்; போலீஸ் அதிகாரி பேட்டி


போலி ஹீரோக்களை தவிர்த்து நிஜ ஹீரோக்களை விரும்புங்கள்; போலீஸ் அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 13 July 2019 6:23 AM GMT (Updated: 13 July 2019 6:23 AM GMT)

போலி ஹீரோக்களை தவிர்த்து நிஜ ஹீரோக்களை விரும்புங்கள் என மத்திய பிரதேச போலீஸ் அதிகாரி பேட்டியளித்து உள்ளார்.

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கைலாஷ் பவார்.  இவர் இந்திய விமான படையின் பைலட் அபிநந்தன் போன்று பெரிய மீசை வைத்துள்ளார்.

இதுபற்றி பவார் கூறும்பொழுது, திரை நட்சத்திரங்கள் போன்ற போலி ஹீரோக்களை இளைஞர்கள் பின்பற்றி அவர்களை போன்று நடக்க முயற்சிப்பது வழக்கம்.  ஆனால், பைலட் அபிநந்தன் அதிரடியான முறையில் செயல்பட்டு தனது பணியை செய்து முடித்தவர்.  மக்களுக்கு நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தியவர்.  இதுவே அவரை போன்று மீசை வைக்க என்னை தூண்டியது என கூறியுள்ளார்.

இந்தியாவுக்குள் கடந்த பிப்ரவரி 27ந்தேதி ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடித்தபோது இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. இதில் ஒரு விமானம் பாகிஸ்தானுக்குள் விழுந்தது.

அதில் இருந்த தமிழகத்தை சேர்ந்த பைலட் அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டார்.  இந்திய எல்லையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிம்பர் மாவட்டம் ஹரோன் என்ற கிராமத்தில் விமானம் கீழே விழுந்தது. பைலட் அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தார்.

இதை அந்த பகுதியினர் பார்த்துவிட்டு அவர் கீழே குதித்த இடத்தை நோக்கி சென்றனர். அப்போது அபிநந்தன் பத்திரமாக கீழே இறங்கினார். அந்த இடத்தை இளைஞர்கள் சுற்றி வளைத்தனர். அவர் விழுந்த இடம் பாகிஸ்தானா? இந்தியாவா? என்பது அபிநந்தனுக்கு சரியாக தெரியவில்லை.

எனவே அந்த இளைஞர்களிடம் இது பாகிஸ்தானா இந்தியாவா என்று கேட்டார். இது பாகிஸ்தான் என்று கூறிய அவர்கள் அபிநந்தனை தாக்குவதற்கு முயன்றனர். எதிரிகள் மத்தியில் நின்றாலும் நெஞ்சுறுதியுடன் அவர் செயல்பட்டார்.

விமான பைலட்டுகள் எப்போதும் கைத்துப்பாக்கி வைத்திருப்பது வழக்கம். எனவே அந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். அதையும் மீறி இளைஞர்கள் கற்களால் அவரை தாக்கினார்கள். இருந்தபோதும் வீரத்தை கைவிடாத அபிநந்தன் துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டி எச்சரித்தார்.  இதன்பின் அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.

Next Story