‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயருக்கு அபராதம்


‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயருக்கு அபராதம்
x
தினத்தந்தி 16 July 2019 9:00 PM GMT (Updated: 16 July 2019 8:10 PM GMT)

நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மும்பை,

மும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதன் அருகில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம் நிறுத்தினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இந்தநிலையில் வில்லேபார்லே- அந்தேரி இடையே உள்ள கோல்டோங்கிரியில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. விதிமுறை மீறும் வாகன ஓட்டிகளிடம் மாநகராட்சி மிகப்பெரிய தொகையை அபராதமாக வசூலித்து வரும் நிலையில் மும்பை மேயரின் காரே ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தான் ஓட்டலில் சாப்பிட சென்றபோது, அது நோ பார்க்கிங் பகுதி என கவனிக்காமல் தனது டிரைவர் அங்கு காரை நிறுத்தி விட்டார். இது தவறு தான் என்று மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையே போக்குவரத்து விதியை மீறிய மேயருக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கையை எடுத்தனர். இது தொடர்பாக அவருக்கு இ-செல்லான் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் மதுக்கர் பாண்டே தெரிவித்தார்.

Next Story