அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்: தமிழக சபாநாயகருக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வாபஸ்


அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்: தமிழக சபாநாயகருக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வாபஸ்
x
தினத்தந்தி 30 July 2019 9:45 PM GMT (Updated: 30 July 2019 8:21 PM GMT)

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், தமிழக சபாநாயகருக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வாபஸ் பெறப்பட்டது.

புதுடெல்லி,

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபாநாயகர் ப.தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் புகார் மனு அளித்தார். இந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கும் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து 3 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்தது. அத்துடன், மனு மீது பதில் அளிக்குமாறு சபாநாயகர் ப.தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சமீபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் அ.தி.மு.க.வில் நீடிப்பதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எஸ்.போப்டே தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் 3 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவர்கள் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதிப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.


Next Story