குற்றவாளிக்கு அதிகாரமளித்ததை பா.ஜனதா ஒப்புக்கொண்டது - பிரியங்கா காந்தி விமர்சனம்


குற்றவாளிக்கு அதிகாரமளித்ததை பா.ஜனதா ஒப்புக்கொண்டது - பிரியங்கா காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 1 Aug 2019 9:36 AM GMT (Updated: 1 Aug 2019 9:36 AM GMT)

உன்னோவ் விவகாரத்தில் குற்றவாளிக்கு அதிகாரமளித்ததை பா.ஜனதா ஒப்புக்கொண்டது என பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் உ.பி. மாநிலம் உன்னோவ் தொகுதியின் எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வரும் நிலையில் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னுடைய உறவினர்கள், வழக்கறிஞருடன் கடந்த ஞாயிறு அன்று சிறையிலிருக்கும் மாமாவை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவருடைய கார் மீது லாரி மோதியது. இருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது கொலை முயற்சியென பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையை 7 நாட்களில் முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விசாரணை டெல்லிக்கு மாற்றப்படுகிறது.

இந்நிலையில் குல்தீங்சிங் செங்காரை பா.ஜனதா கட்சி கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. இந்நகர்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரசை சேர்ந்த பிரியங்கா காந்தி, குற்றவாளிக்கு அதிகாரமளித்ததை பா.ஜனதா ஒப்புக்கொண்டது என விமர்சனம் செய்துள்ளார். 

"உத்தபிரதேசத்தில் 'ஜங்கிள் ராஜ்' (காட்டு ராஜ்ஜியம்) கட்டவிழ்த்து விடப்பட்டதை அறிந்து கொண்டு நடவடிக்கையை எடுத்துள்ள சுப்ரீம் கோர்ட்டுக்கு  நன்றி. இறுதியாக பா.ஜனதா ஒரு குற்றவாளிக்கு அதிகாரம் அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளது. தன்னை திருத்திக்கொள்ளவும், அளவிடமுடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வகையிலான திசையில் செல்லவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். 

Next Story